மத்தியில் பாஜ ஆட்சி அமைந்தவுடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பெரிய அளவில் விலை குறைந்தது. ஆனால், அதன் உடைய பலன்களை நாட்டு மக்களுக்கு வழங்காமல் கலால் வரி விதித்து அரசு கஜானாவை நிரம்பி கொண்டார்கள்.
கடந்த காலத்தில் மாதத்துக்கு ஒரு முறை, 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை ஆய்வு செய்யப்படும். ஆனால், இன்றைக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேறும் போது, பெட்ரோலிய நிறுவனங்கள் நாள்தோறும் ஆய்வு செய்து விலையேற்றி வருகின்றனர். சமீபத்தில் ஈரான், அமெரிக்கா பதற்றத்தின் விளைவாக, கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் ஏறி இருக்கிறது.
உடனே இன்றைக்கு ெபட்ரோல் விலை 10 பைசா, டீசல் விலை 15 பைசா விலையேற்றப்பட்டிருக்கிறது. ஜனவரி 5ம் தேதி நிலவரப்படி ரூ.78.28 பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது என்ற எண்ணம் மத்திய அரசிடம் இல்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது உடனடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்துவதற்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசுக்கு அனுமதி வழங்கி விட்டது. இதில், மத்திய அரசு தலையிடுவதில்லை என்கிற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் படி மத்திய பாஜ அரசுக்கு நாட்டு மக்கள் மீது, எந்த கவலையும் இல்லை என்பது உறுதிப்படுத்துகிறது.
2020ம் புத்தாண்டு பிறந்த அன்றே ரயில்வே பயணிகள் கட்டணம் ஏற்றப்பட்டது. இந்தியாவில் கிட்டத்தட்ட தினமும் 2 கோடி 30 லட்சம் பேர் ரயில் மூலமாக பயணம் செய்கின்றனர். குளிர்சாதனம் செய்யப்படாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்ய 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. 2 ஆயிரம் கி.மீ பயணம் செய்தால் ரூ.20 கட்டண உயர்வு ஏற்படும். அதே போன்று குளிர்சாதனம் வசதி இல்லாத படுக்கை வசதி கொண்ட ரயிலில் 1 கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டதால் 2 ஆயிரம் கிலோ மீட்டருக்கு ₹40 கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். குளிர்சாதனம் வசதி கொண்ட ரயிலில் பயணம் செய்தால் 1 கிலோ மீட்டருக்கு 4 பைசா ஏற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியும் நடக்கிறது. மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.695ல் இருந்து ரூ.714 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பெல்லாம் மானியங்கள் அடிப்படையில் விலை குறைக்கப்பட்டு சிலிண்டர் எரிவாயுவை பெற்றுக்கொண்டு இருந்தோம். இப்போது மானியம் வங்கி கணக்கில் வருவதும், நாம் முழு தொகையை செலுத்துவதன் மூலம் பொதுமக்கள் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த அக்டோபரில் 4.6 சதவீதமாக பணவீக்கம் இருந்தது. நகரங்களில் 5.1 சதவீதமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு எல்லா பொருட்களின் விலை குறைந்ததற்கு என்ன காரணம் என்றால், தேவைக்கேற்ற உற்பத்தி இல்லாத காரணத்தால் வெங்காயம் விலை ரூ.25க்கு விற்றது. இப்போது ரூ.100க்கு விற்பனை ஆகிறது. வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. நமக்கு தேவையான வெங்காயத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலையில் மத்திய பாஜ அரசு வெங்காயத்தின் விலையை முற்றிலும் கட்டுப்படுத்த தவறிவிட்டது. வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து ரூ.10க்கு தான் வாங்குகின்றனர். இடையில் இடைதரகர்கள் விலையேற்றத்தின் காரணமாக அந்த சந்தையை கட்டுபடுத்த முடியாமல் இன்றைக்கு ரூ.100 கொடுத்து வெங்காயத்தை வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.