திருவனந்தபுரம்: பிரபல நடிகர் கலாபவன்மணி சாவில் நீடித்து வந்த மர்மம் தற்போது விலகி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கல்லீரல் பாதிப்பால் தான் கலாபவன் மணி இறந்தார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் கலாபவன் மணி. தமிழில் விஜய் நடித்த புதிய கீதை, விக்ரம் நடித்த ஜெமினி உள்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இதேபோல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கலாபவன் மணி மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து கொச்சி அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது உடலில் மீத்தைல் ஆல்கஹால் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கலாபவன் மணி இறப்பதற்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு மது விருந்தில் கலந்து கொண்டார். ஆகவே யாராவது மதுவில் விஷம் வைத்து கொன்று இருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக சாலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.