52 கோடி ரூபாய்க்கு பணபரிமாற்றம்: இதுவரை ஒரு கோடியே 15 லட்சம் பாஸ்டேக் வினியோகம்...மத்திய அரசு தகவல்

டெல்லி: இதுவரை ஒரு கோடியே 15 லட்சத்திற்கும் அதிகமான பாஸ்டேக் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா  முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 540 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில்  காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதற்கு முடிவு கட்டும் வகையில், நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும்  தானியங்கி  சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை (பாஸ்டேக்) அமல்படுத்த திட்டமிடப்பட்டது.

இந்தமுறையை பயன்படுத்துவோர் எந்த  சுங்கச்சாவடியிலும், தங்களது வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

இதற்காக பிரத்யேகமாக ‘பாஸ்டேக்’ என்ற வழி உருவாக்கப்பட்டுள்ளது. இதில், செல்வதற்கு ‘பாஸ்டேக்’ என்ற கார்டை பயன்படுத்த வேண்டும். இந்த  கார்டை அனைத்து சுங்கச்சாவடியிலும் வாங்கிக் கொள்ளலாம். இதற்காக பாஸ்டேக் கார்டுகள் சில ஏஜென்ஸிகள் மூலமாக விற்பனைக்கு  கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இருப்பினும், கடந்த 15-ம் தேதி முதல் பாஸ்டேக் முறை  கட்டாயமாக்கப்பட்டாலும் அதற்கான கெடு மேலும், ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், பாஸ்டேக் தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நாளொன்றுக்கு சராசரியாக ஒரு  லட்சத்திற்கும் அதிகமான பாஸ்டேக் வினியோகிக்கப்படுவதாகவும், தினமும் 30 லட்சம் எண்ணிக்கையில் 52 கோடி ரூபாய்க்கு அதிகமாக  பணபரிமாற்றம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் பாஸ்டாக்கில், யு.பி.ஐ.,மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களின் பிரி-பெய்டு  கணக்குகள் வழியாகவும் பணத்தை நிரப்பிக் கொள்ளவும் மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.

வருவாய் அதிகரிப்பு:

 

பாஸ்டேக் மூலம் கிடைக்கும் வருவாய் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 66 சதவிதம் அதிகரித்துள்ளது. அதை வேலையில் ரொக்க வசூல் ரூ.51  கோடியில் இருந்து ரூ.33.5 கோடியாக குறைந்துள்ளது.

எத்தனை டோல்கேட்?

இந்தியாவில் உள்ள மொத்த சுங்கச்சாவடி களின் எண்ணிக்கை 540. இதில் தமிழகத்தில் 47 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதிக சுங்கச்சாவடி உள்ள   மாநிலம் ராஜஸ்தான். இங்கு 71 டோல்கேட்கள் உள்ளன.

Related Stories: