புதுடெல்லி: நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் 1950ம் ஆண்டு உயிரிழந்தார். அவரது 69வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘சர்தார் படேலின் நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நாட்டுக்காக அவர் ஆற்றிய தனிச்சிறப்பு வாய்ந்த சேவையால், நாம் ஈர்க்கப்பட்டு உள்ளோம் என்பதை நினைவில் கொள்வோம்,’ என்று கூறியுள்ளார். இந்திய சமஸ்தானங்களை ஒன்றிணைத்த படேல் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ள பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தில் கடந்தாண்டு அவருக்கு 182 அடி உயரத்தில் சிலையை நிறுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.