பாட்னா: குடியுரிமை சட்டம் அமல்படுத்துவதை எதிர்த்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் தனது பதவியை ராஜினாமா செய்து நிதிஷ் குமாருக்கு கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபலமான அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், ‘சிட்டிசன்ஸ் பார் அக்கவுண்டபுள் கவர்னன்ஸ்’ என்ற அமைப்பை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடத்தி வந்தார். அதில் தான் சுனில் என்பவரும் அங்கம் வகித்தார். இருவருக்கும் இடையே உருவான கருத்து வேறுபாட்டால், பிரசாந்த் கிஷோர் ‘இந்தியன் பொலிட்டிகல் ஆக்சன் கமிட்டி’ என்ற புதிய அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். மோடி பிரதமர் ஆவதற்கும், நிதிஷ்குமார் பீகார் முதல்வர் ஆவதற்கும், ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா முதல்வர் ஆவதற்கும் பிரசாந்த் கிஷோர் வழங்கிய தேர்தல் ஆலோசனை பிரதான காரணம் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.தற்போது, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின், துணை தலைவராக உள்ள பிரசாந்த் கிஷோர், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக மக்களவை, மாநிலங்களவையில் தங்கள் கட்சி எம்பிக்கள் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், கட்சித் தலைவர் நிதிஷ்குமார் உடன்படவில்லை. இந்த மசோதாவிற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்ததால், நிதிஷ்குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் கருத்து வேறுபாடு இருந்துவந்தது.