சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியே எகிப்து வெங்காயத்தை சாப்பிட்டு பார்த்து அதன் தன்மையை பரிசோதித்து பார்த்தார். இந்த வெங்காயத்தில் சல்பர் அதிகம். அதனால் காரம் தூக்கலாக இருக்கும். இது இதயத்துக்கு நல்லது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். இதுகுறித்து சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த உயர் அலுவலர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தது. அதன்படி, குறைந்த விலைக்கு தரமான வெங்காயம் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ 40க்கு விற்பனை செய்யப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரம் மெட்ரிக் டன் எகிப்து வெங்காயம் டிசம்பர் மூன்றாம் வாரத்தில் தமிழகம் வந்தடையும். அவ்வாறு பெறப்படும் வெங்காயம், தமிழகத்தில் செயல்படும் 79 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படும் 1,200 நியாயவிலைக் கடைகளில் முதற்கட்டமாக விற்பனை செய்யப்படும். பொதுமக்களுக்கு வெளிச்சந்தையை விட இந்த வெங்காயம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும்.