புதுடெல்லி: மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஆங்கிலோ இந்தியன் பிரிவினருக்கு வழங்கப்பட்ட 70 ஆண்டு கால இட ஒதுக்கீடு அடுத்த மாதம் 25ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்கவும், ஆங்கிலோ இந்தியன் ஒதுக்கீட்டை ரத்து செய்யவும் மத்திய அரசு சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்தது. இந்த மசோதா, மக்களவையில் கடந்த 10ம் தேதி ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்தது. மசோதாவை தாக்கல் செய்த மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசுகையில், ‘‘எஸ்.சி, எஸ்.டி பிரிவினரின் நலத்திற்கு, அந்தப் பிரிவைச் சாராதவர்களும் உதவி செய்துள்ளனர். நாம் எஸ்.சி, எஸ்.டி உறுப்பினர்களை அதிகமாக பெற்றுள்ளோம். எஸ்.சி, எஸ்.டி பிரிவினரின் நலனுக்காக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, பிர்சா முண்டா ஆகியோர் பணியாற்றி உள்ளனர். நாட்டில் ஆங்கிலோ இந்தியன் பிரிவைச் சேர்ந்தவர்கள் 296 பேர் மட்டுமே உள்ளதால் அவர்களுக்கான ஒதுக்கீடு நீட்டிக்கப்படவில்லை. இந்த மசோதாவை உறுப்பினர்கள் ஒரு மனதாக ஆதரிக்க வேண்டும்,’’ என்றார்.