பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த நவமலையில் சில மாதத்திற்கு முன்பு அட்டகாசம் செய்து வந்த ஒற்றை யானை, அங்கிருந்து இடம்பெயர்ந்து அர்த்தனாரிபாளையம் மற்றும் ஆண்டியூர் கிராமம் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தது. சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்பு தினமும் தொடர்ந்து அட்டகாசம் செய்ததுடன், தோட்டத்து சாளைகளை சேதப்படுத்தியது. நவமலை மற்றும் சேத்துமடை, அர்த்தனாரிபாளையம் என பல இடங்களில், 4 பேரை கொன்ற, அந்த ஒற்றை யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டினர்.கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் அரிசி ராஜா என்ற பெயரை பெற்ற அந்த ஒற்றை காட்டு யானையை பிடிக்க, அர்த்தநாரிபாளையத்தில் வனத்துறையினர் முகாமிட்டனர்.5 நாட்கள் தொடர்ந்து ேதடுதல் வேட்டை நடந்தது. 13ம் தேதி இரவில் ஆண்டியூரில் உள்ள ஒரு தோட்டத்தில் நின்ற அரிசி ராஜா மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் அந்த யானை, உலாந்தி வனச்சரகத்திற்குட்பட்ட டாப்சிலிப்பை அடுத்த வரகளியாறில் உள்ள மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. அந்த யானை அடைக்கப்பட்டுள்ள கூண்டருகே, சுமார் 5 கும்கிகள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டன. காலை, மதியம், மாலை என தொடர்ந்து உணவு வழங்கப்பட்டது. கூண்டில் அடைக்கப்பட்ட அரிசி ராஜா, தற்போது சகஜமான நிலைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.