திஸ்பூர்: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அசாம் மாநிலம் கவுஹாத்தியில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நேற்றிலிருந்தே போராட்டங்கள் வெடிக்க தொடங்கிவிட்டன. அதன் நீட்சியாக வடகிழக்கு மாநில மாணவர் சங்கமும், அனைத்து அசாம் மாணவர் அமைப்பும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாணவர் அமைப்பு சார்பில் 12 மணிநேர கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் கவுஹாத்தி, கோலாகட், திப்ருகர் உள்ளிட்ட இடங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வழக்கை பெரிதும் பாதிப்புக்குள்ளானது. பல்வேறு அமைப்பினரும் தொடர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த சட்டத்தினால் எங்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது.