சென்னை: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வருகையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் டி.ரவிக்குமார், துணை பொதுச்செயலாளர்கள் வன்னி அரசு, எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:இலங்கை அதிபராக தேர்வாகி இருக்கும் கோத்தபய ராஜபக்சேவை, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர், பிரதமர் மோடி அழைப்பை ஏற்று கோத்தபய ராஜபக்சே வருகிற 29ம் தேதி இந்தியா வருகிறார், என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழர்கள் மட்டுமன்றி உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.