புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சி.பி.ஐ அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து உச்ச நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால்,இதே வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 16ம் தேதி ப.சிதம்பரத்தை கைது செய்திருந்ததால், அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.