திருமலை: ஐதராபாத்தில் பிரபல சினிமா தயாரிப்பாளர் சுரேஷ்பாபு, நடிகர் வெங்கடேஷ் உட்பட 3 பேர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்பாபு வீடு மற்றும் அலுவலகம் ராமாநாயுடு ஸ்டூடியோ, சுரேஷ் புரோடக்சன்ஸ் நிறுவனம், சுரேஷ் பாபுவின் சகோதரரும் பிரபல தெலுங்கு நடிகருமான வெங்கடேஷ் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. பூபாலன்குடா டாலர் ஹில்ஸ் பகுதியில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் அதிகாலை முதலே வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர். இதேபோன்று பிரபல நடிகர் நானி வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. நானி சினிமா படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றுள்ள நிலையில் அவரது வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சினிமா தயாரிப்பு செலவு மற்றும் அதன் மூலம் கிடைத்த வருவாய் குறித்து அதிகாரிகள் விளக்கம் கேட்டு வருகின்றனர்.