வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா எழும்பூர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை: வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரன்ட் காரணமாக, சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவர் கடந்த 2007-08, 2008-09 ஆண்டுகளில் தனது வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு தகவல் வந்தது. அதன்படி அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2010ம் ஆண்டு சோதனை நடத்தினர். அந்த சோதனையை தொடர்ந்து, அவர் வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, வருமான வரித்துறையினர் சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி மலர்மதி முன்பு நடந்து வருகிறது. இந்நிலையில், ஞானவேல்ராஜாவிடம் கேள்விகள் கேட்டு,  குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடைமுறைக்காக ஞானவேல்ராஜாவை ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், ஞானவேல்ராஜாவும் ஆஜராகவில்லை, அவரது தரப்பில் வக்கீல்களும் ஆஜராகவில்லை.பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை தரப்பு வழக்கறிஞர் ஷீலா, நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி,  ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வாரன்ட்டுக்கு சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Related Stories: