சென்னை: பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் 14,098 ஏரிகள் உள்ளது. இதில், நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ₹3 ஆயிரம் கோடி செலவில் 5 ஆயிரம் ஏரிகள் புனரமைக்கப்பட்டது. தற்போது 2ம் கட்டமாக 4,778 ஏரிகள் புனரமைக்க உள்ளது. இந்த நிலையில் குடிமாரமத்து திட்டத்தின் கீழ் 2016ல் 1513 ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து 2017-18ல் 1511 ஏரிகள் புனரமைப்பு பணி எடுக்கப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட பணிகள் இன்னும் தொடங்கவில்லை. இந்த நிலையில் கடந்த 2019-20ல் 1829 ஏரிகள் புனரமைப்பு பணிக்கு கடந்த ஜூன் மாதத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்ேபாது வரை 65 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள பணிகள் நடந்து வருகிறது. இதை தவிர்த்து விரைவுபடுத்தப்பட்ட பாசன திட்டம், ஆர்ஆர்ஆர் திட்டத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட ஏரிகள் புனரமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் வரும் ஆண்டில் ₹1000 கோடியில் 5 ஆயிரம் ஏரிகளை புனரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டமதிப்பீட்டை விரைந்து தயார் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.