சென்னை: கோவையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 10.05 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது. அதில் 169 பயணிகள், 5 விமான சிப்பந்திகள் இருந்தனர். இந்த விமானம், நேற்று பகல் 11.05 மணிக்கு சென்னையில் தரை இறங்க வேண்டும். 10.30 மணியளவில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென வால் பகுதியான சரக்கு பார்சல்கள் வைக்கும் கார்கோ பகுதியில் இருந்து புகை வந்தது. இது விமானிக்கு தெரியவந்தது. உடனே, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, அவசரமாக தரையிறங்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஓடுபாதையை சுற்றிலும் தீயணைப்பு வண்டிகள், மருத்துவ குழுவினர், அதிரடிப்படை தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். அவசர கால முன்னுரிமை அடிப்படையில் 18 நிமிடங்கள் முன்னதாக 10.47 மணிக்கு விமானம் சென்னையில் தரை இறங்கியது. அதற்கு பிறகே பயணிகள் நிம்மதியடைந்தனர். விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு பயணிகள் கீழே பத்திரமாக இறக்கப்பட்டனர். இதையடுத்து, தொழில்நுட்ப குழுவினர், விமானத்துக்குள் ஏறி, சரக்கு பார்சலில் ஆய்வு செய்தனர். புகை வந்ததற்கான அறிகுறி தெரியவில்லை. தொழில்நுட்ப கோளாறு என்பது தெரிந்தது.இந்த விமானம் சென்னையில் இருந்து மீண்டும் பகல் 1 மணிக்கு டெல்லி புறப்பட வேண்டும். கோளாறு காரணமாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதிகாரிகள், விமானத்தை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் டெல்லியில் உயர் அதிகாரிகள் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.