உள்ளாட்சி தேர்தலுக்காக விருப்ப மனு தாக்கல் செய்யும் அவகாசம் 27ம் தேதி வரை நீட்டிப்பு: திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்காக விருப்ப மனு தாக்கல் செய்யும் அவகாசம் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க உள்ளன. உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் மாத இறுதியில் நடத்தலாம் என தமிழக தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் விருப்ப மனு பெறுவது குறித்து அதிமுக முதலில் அறிவித்தது. அதிமுகவைத் தொடர்ந்து திமுகவும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் விருப்ப மனு அளிப்பது குறித்து அறிவித்தது.

திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கட்சியினருக்கான விருப்ப மனு விநியோகத்தை கடந்த 14ம் தேதி திமுக தொடங்கியது. வரும் 20ம் தேதி (நாளை) வரை கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. விருப்ப மனுவை ரூ.10 கட்டி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பெறலாம் எனவும், அப்படி பெற முடியாதவர்கள் முரசொலி பத்திரிகையில் வந்துள்ள மாதிரிப் படிவத்தை வைத்து அதேபோன்று விண்ணப்பத்தை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஏராளமான தொண்டர்கள் விருப்ப மனுவைப் போட்டிபோட்டு வாங்கி வருகின்றனர். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்காக விருப்ப மனு தாக்கல் செய்யும் அவகாசம் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத் தொழர்கள், உரிய விண்ணப்பப் படிவத்தை மாவட்ட கழகத்திலிருந்து பெற்று, தாம் போட்டியிட விரும்பு் பொறுப்பு மற்றும் தம்மை பற்றிய விவரங்களை அந்தப் படிவத்தில் குறித்து 2019 நவம்பர் 20 வரை மாவட்ட கழக அலுவலகத்தில் அல்லது தலைமைக் கழகத்தில் உரிய கட்டணத்துடன் வழங்கிட வேண்டுமென ஏற்கனவே 11.11.2019 அன்று வெளியிட்ட தலைமைக் கழக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு மாவட்ட கழகச் செயலாளர்கள் கால அவகாசம் நீட்டித்திட வேண்டுகோள் வைத்ததன் அடிப்படையி்ல், வருகிற 27.11.2019(புதன்கிழமை) வரை, விருப்பமனு தாக்கல் செய்தி அனுமதிக்கப்படுகிறது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: