4 நாள் ஐடி ரெய்டு முடிவுக்கு வந்தது கொசுவலை நிறுவனத்தில் 10 கிலோ தங்கம் பறிமுதல்

கரூர்: கரூர் கொசுவலை நிறுவனத்தில் 4வது நாள் சோதனையில் வருமானவரித்துறை அதிகாரிகள் 10 கிலோ தங்கம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கரூர் வெங்கமேடு பகுதியில் வெளிநாடுகளுக்கு கொசுவலை ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் உள்ளது. கரூர் வெண்ணைமலையில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமும், நாவல்நகர் அருகே பேக்டரியும் இயங்கி வருகிறது. மேலும், தொழிற்சாலை ராம்நகரிலும், உரிமையாளர் வீடு சின்னாண்டாங்கோயில் பகுதியிலும் உள்ளன.

இந்நிலையில் கடந்த 3 நாளாக திருச்சி, மதுரை, கோவை, கரூர், திருப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட ஐ.டி. அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தினர்.  தொடர்ந்து 4வது நாளாக நேற்று காலை வரை 3 இடங்களில் சோதனை நிறைவு பெற்றதோடு, மதியம் வரை நாவல்நகர் பகுதியில் உள்ள பேக்டரியில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 4வது நாளாக நடந்த சோதனையில் 10 கிலோ தங்க நகைகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 32 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதோடு 430 கோடி அளவுக்கு வரிஏய்ப்பு நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: