லக்னோ: அயோத்தியில் மசூதி கட்ட அரசு தரும் 5 ஏக்கர் நிலத்தை பெறுவதா? வேண்டாமா? என்பதில் உள்ள சட்ட சிக்கல்களை ஆய்வு செய்ய இருப்பதாக சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், சன்னி வக்பு வாரியம் மசூதி கட்டிக் கொள்ள 5 ஏக்கர் நிலத்தை அரசு தர வேண்டுமென உத்தரவிட்டது. இதற்கான நிலத்தை தேர்வு செய்யும் பணியில் மத்திய மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. அதே சமயம், அரசு தரும் 5 ஏக்கர் நிலத்தை பெறுவதா? வேண்டாமா? என்பது குறித்து வரும் 26ம் தேதி இறுதி முடிவை தெரிவிப்பதாக சன்னி வக்பு வாரியம் கூறியிருந்தது.
இந்நிலையில், இந்த வாரியத்தின் தலைவர் ஜூபர் பரூக்கி நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களை வழிநடத்தும் அமைப்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் செயல்பட்டு வருகிறது. தனிநபர் சட்ட வாரியம், அயோத்தி வழக்கில் மனுதாரர்களில் ஒருவராக இல்லை என்றாலும், அதன் கருத்தை அறிவது முக்கியமானது. எனவே, தனிநபர் சட்ட வாரியத்துடனான ஆலோசனை கூட்டம் நாளை (இன்று) நடக்கிறது. அதோடு, அரசு வழங்கும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பதா அல்லது வேண்டாமா, நிராகரித்தால் அது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பது போலாகுமா என்பது குறித்து சட்ட நிபுணர்களின் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இறுதி முடிவை வரும் 26ம் தேதி அறிவிப்போம்,’’ என்றார். பாபர் மசூதி செயற்குழு ஒருங்கிணைப்பாளர் ஜிலானி கூறுகையில், ‘‘தனிநபர் சட்ட வாரியம் எடுக்கும் முடிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால், அவர்கள் எடுப்பதுதான் இறுதி முடிவாக இருக்கும் என கூற முடியாது,’’ என்றார்.