காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில மாக இருந்தபோது, அதற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தேசிய மாநாட்டு கட்சி, ஜேகே மக்கள் மாநாட்டு கட்சி, சிபிஎம் தலைவர் முகமது யூசுப் தரிகாமி, முன்னாள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று, நீதிபதி ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் ெகாண்ட அரசியலமைப்பு அமர்வு முன் வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த மனுக்கள் மீது இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது. பல்வேறு பிரிவினர் தாக்கல் செய்துள்ள மனுக்களை தொகுத்து ஒரே வழக்காக தாக்கல் செய்தால், வழக்கு விசாரணை எளிதாக அமையும். விசாரணை டிசம்பர் 10ல் தொடங்கும். முக்கிய பிரச்னைகள் குறித்த 2 புதிய மனுக்களுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்,’ என தெரிவித்தனர்.

Related Stories: