ப.சிதம்பரம் ஜாமீன் மனு ஐகோர்ட் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் உதவியதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த  ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி சிபிஐ,யால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால், இதே வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை அவரை கைது செய்ததால், தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

Related Stories: