தெலங்கானாவில் விபத்து ரயில்கள் நேருக்கு நேர் மோதல் 15 பயணிகள் படுகாயம்: ரயில்வே போலீசார் விசாரணை

திருமலை: தெலங்கானாவில் ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள லிங்கம்பல்லியிலிருந்து புறநகர் ரயில் (எம்.எம்.டி.எஸ்) நேற்று காலை 11.30 மணியளவில் காச்சிகுடா ரயில் நிலையத்திற்கு வந்து பயணிகளை இறக்கிவிட்டு 3வது டிராக்கில் இருந்து சிக்னல்  கொடுப்பதற்கு முன்பாகவே புறப்பட்டது. அந்த நேரத்தில் கர்னூலில் இருந்து செகந்திராபாத் நோக்கி வந்த அந்திரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 2வது டிராக்கில் காச்சிகுடா ரயில் நிலையத்திற்குள் நுழைந்தது. இதில்  3வது டிராக்கில் இருந்து  சிக்னல் கொடுப்பதற்கு முன்பே புறப்பட்ட புறநகர் ரயில் எதிர் திசையில் வந்த எஸ்க்பிரஸ் ரயில் மீது நேருக்கு நேர் மோதியது.

இதனைபார்த்த அங்கிருந்த பொதுமக்களும் மற்றும் ரயில்வே போலீசார், அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து வந்து பயணிகளை மீட்டு ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 15 பேர் காயமடைந்தனர். புறநகர் ரயிலில் உள்ள 6 பெட்டிகளும், எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள 3 பெட்டிகள் சேதமடைந்தன. இந்நிலையில் இரண்டு இன்ஜின்களுக்கும் இடையே சிக்கிக் கொண்ட புறநகர் இன்ஜின் டிரைவர் சந்திரசேகரை சுமார் 5 மணிநேரம் போராடி  ரயில்வே பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். இதில் சேகர் என்ற பயணியின் நிலை கவலைகிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.புறநகர் ரயில் இன்ஜின் டிரைவர் சேகர் சிக்னல் வழங்குவதற்கு முன்பாக ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டதாலும், இவரின் கவனக்குறைவாலும்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த  விபத்தின் காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சில ரயில்கள் வழித்தடம் மாற்றப்பட்டு உள்ளது.தண்டவாளத்தில் கவிழ்ந்த பெட்டிகளை அகற்றும் பணி நடக்கிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: