திருமலை: தெலங்கானாவில் ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள லிங்கம்பல்லியிலிருந்து புறநகர் ரயில் (எம்.எம்.டி.எஸ்) நேற்று காலை 11.30 மணியளவில் காச்சிகுடா ரயில் நிலையத்திற்கு வந்து பயணிகளை இறக்கிவிட்டு 3வது டிராக்கில் இருந்து சிக்னல் கொடுப்பதற்கு முன்பாகவே புறப்பட்டது. அந்த நேரத்தில் கர்னூலில் இருந்து செகந்திராபாத் நோக்கி வந்த அந்திரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 2வது டிராக்கில் காச்சிகுடா ரயில் நிலையத்திற்குள் நுழைந்தது. இதில் 3வது டிராக்கில் இருந்து சிக்னல் கொடுப்பதற்கு முன்பே புறப்பட்ட புறநகர் ரயில் எதிர் திசையில் வந்த எஸ்க்பிரஸ் ரயில் மீது நேருக்கு நேர் மோதியது.
இதனைபார்த்த அங்கிருந்த பொதுமக்களும் மற்றும் ரயில்வே போலீசார், அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து வந்து பயணிகளை மீட்டு ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.