திருப்பத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை விநியோகம்

*உயிரோடு விளையாடுவதாக பெற்றோர் குற்றச்சாட்டு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை விநியோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்தில் 119 சத்துணவு மையங்கள், 136 அங்கன்வாடி மையங்கள், 11 நகராட்சி பள்ளிகள், 24 நகராட்சி அங்கன்வாடி மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு இலவச முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாதவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நேற்று மதிய உணவுடன்  முட்டை வழங்கப்பட்டது. அந்த முட்டை அழுகிய நிலையில் இருப்பதை கண்ட பெற்றோர் அதை மாணவர்கள் சாப்பிட வேண்டாம் எனக்கூறி தடுத்தனர்.

இதையடுத்து பள்ளிக்கு சென்ற பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர்களிடம் முறையிட்டனர். இதைகேட்ட சத்துணவு அமைப்பாளர் வந்த முட்டையை சமைத்து கொடுத்தோம். அவ்வளவு தான். எங்களுக்கு வேறு ஏதும் தெரியாது எனக்கூறினர். உடனே, பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்ற பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நலங்கிள்ளி சென்று விசாரணை நடத்தினார். பிறகு அழுகிய முட்டைகளை பறிமுதல் செய்து, வேறு முட்டையை சமைத்து மாணவர்களுக்கு விநியோகிக்க உத்தரவிட்டார். மேலும் மீதமுள்ள முட்டைகளை பரிசோதனை செய்து பார்த்தபோது அவை அனைத்தும் அழுகி இருந்தது தெரியவந்தது.

பின்னர் அந்த முட்டைகளையும் பறிமுதல் செய்து இது போன்ற தவறு இனி நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாகவும், முட்டைகளை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதையேற்ற பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: