தஞ்சை பெரிய கோயிலில் ராஜ ராஜ சோழன் சதயவிழா கோலாகலம்: மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மாவட்ட நிர்வாகம் மரியாதை

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் ராஜ ராஜ சோழன் சதய விழா கோலாகலமாக நேற்று துவங்கியது. 2ம் நாளான இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊர்வலமாக வந்து ராஜ ராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1034வது ஆண்டு சதயவிழா நேற்று துவங்கியது. முதலில் டிகேஎஸ்.பத்மநாபன் குழுவினரின் இசைநிகழ்ச்சி, களிமேடு அப்பர் குழுவினரின் திருமுறை அரங்க நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் நடந்த நிகழ்ச்சிக்கு சதய விழாக்குழு தலைவர் துரை.திருஞானம் வரவேற்றார். தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழக இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பேசினார்.

இதைதொடர்ந்து கருத்தரங்கம், திருமுறை இன்னிசை, பட்டிமன்றம் நடந்தது. முன்னதாக சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயில் மற்றும் ராஜராஜசோழனின் உருவ சிலைக்கு மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டும், பெருவுடையார் சமேத பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது.விழாவின் 2வது நாளான இன்று காலை 8மணிக்கு ராஜராஜ சோழனின் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் யானையுடன் ஊர்வலமாக வந்து ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சதய விழா குழு தலைவர் துரைதிருஞானம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதைதொடர்ந்து இசைநிகழ்ச்சி, பரதநாட்டியம், பெரிய கோயில் கட்டுமான முறை குறித்த ஒலி, ஒளி காட்சி நடைபெற்று வருகிறது.

Related Stories: