சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் (20) என்பவர், புளியந்தோப்பில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன், புளியந்தோப்பு பிரதான சாலையில் பைக்கில் சென்றபோது, வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்பது போல் நடித்து, கத்தி முனையில் மிரட்டி, தினேஷின் விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், புளியந்தோப்பு சாஸ்திரி நகரை சேர்ந்த விக்னேஸ்வரன் (25) என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. தலைமறைவாக இருந்த அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
* புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் சூர்யா (21). இவர் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. வழக்கு ஒன்றில் தலைமறைவாக இருந்த சூர்யாவை நேற்று போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.* சேலையூர் அடுத்த நூத்தஞ்சேரியை சேர்ந்தவர் ரேணுகா (45). மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். உறவினர்கள் இவரை தேடியபோது வீட்டின் அருகே வயல்வெளி கிணற்றில் ரேணுகா பிணமாக மிதந்து கிடந்தார். சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* புளியந்தோப்பு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் உதயகுமார் (34) பிரபல ரவுடி. இவர் ஆற்காடு சுரேஷின் கூட்டாளி. இவர் மீது புளியந்தோப்பு, பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் மூன்று கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு ஒன்றில் போலீசார் அவனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று புளியந்தோப்பு கன்னிகாபுரம் மைதானம் அருகே பதுங்கி இருந்த உதயகுமாரை புளியந்தோப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.5 பேருக்கு குண்டாஸ்சென்னையில் தொடர் கஞ்சா விற்பனை செய்து வந்த பார்டர் தோட்டம் வி.என்.தாஸ் சாலையை சேர்ந்த கஞ்சா வியாபாரி மணிகண்டன் (24), பாஸ்கர் (22), கொலை வழக்கில் தொடர்புடைய கண்ணகி நகரை சேர்ந்த குமரன் (36), நான்கு கொலை வழக்கில் தொடர்புடைய கண்ணகி நகரை சேர்ந்த ராஜேஷ் (29), வியாசர்பாடியை சேர்ந்த சஞ்சய்குமார் (27) ஆகிய 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.