புதுடெல்லி: இந்தியர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக கடந்த மே மாதமே அரசுக்கு தகவல் தெரிவித்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி உளவு பார்க்கப்பட்ட தகவலை கடந்த மே மாதமே மத்திய அரசுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இந்திய கணினி தாக்குதல் தடுப்பு அமைப்பான சி.இ.ஆர்.டி யிடம் உளவு பார்த்த தகவலை வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் பெகாசுஸ் என்ற மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதையோ, எந்த வகையில் தகவல்கள் திருடப்பட்டன என்பது பற்றியோ அதில் கூறவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம் தனி நபர்களுக்கு வரும் தகவல்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை தருவோம் என உறுதி அளித்துள்ளது.