புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி, பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதற்கு முன்னதாக தனக்கு அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதை குறிப்பிட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என்பது தற்போது வரை நடைமுறையில் உள்ள ஒன்றாகும். அதன்படி, தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாயின் பதவிக் காலம் நவம்பர் 17ம் தேதியுடன் முடிய உள்ளது. இந்நிலையில், தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான ஷரத் அரவிந்த் பாப்டே (எஸ்.ஏ.பாப்டே) பெயரை உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கும்படி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து ரஞ்சன் கோகாய் சமீபத்தில் கடிதம் எழுதினார். இந்த பரிந்துரையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்று, எஸ்.ஏ.பாப்டே தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்.