சாவர்க்கர், மோடிக்கு அபிஷேங் சிங்வி பாராட்டு

புதுடெல்லி: இந்துத்துவா தலைவர் சாவர்க்கர், பிரதமர் மோடி ஆகியோரை காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி டிவிட்டரில் பாராட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் பா.ஜ வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருவு வழங்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை விடப்படும்’’ என தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், மகாத்மா காந்தி கொலை வழக்கில், சாவர்க்கர் விடுவிக்கப்பட்டாலும், விசாரணைக்கு உள்ளானவர்’’ என தெரிவித்திருந்தது. மும்பையில் கடந்த வாரம் பேட்டியளித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ‘‘நாங்கள் சாவர்க்கருக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அவரது இந்துத்துவா கொள்கையைத்தான் நாங்கள் ஆதரிக்கவில்லை. சாவர்க்கர் நினைவாக முன்னாள் பிரதமர் இந்திரகாந்தி தபால் தலை வெளியிட்டார்’’ என கூறினார்.

இந்நிலையில், காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி அபிஷேக் சிங்வி டிவிட்டரில் விடுத்துள்ள தகவலில், ‘‘எனக்கு சாவர்க்கரின் கொள்கையில் உடன்பாடு இல்லை. ஆனால் அந்த கொள்கை, அவர் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த திறமையான நபர், தலித் உரிமைகளுக்காக போராடியவர் என்ற உண்மையை நீக்கவில்லை. சுதந்திர போராட்ட இயக்கத்தில் பல வகைககள் உள்ளன. சாவர்க்கரின் நாட்டுப்பற்றில் உள்ள போராட்டக் குணம் மற்றும் காந்தியத்துக்கு எதிரான கொள்கையை ஒருவர் ஏற்க முடியாது’’ என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு டிவிட்டர் பதிவில் பிரதமர் மோடியை பாராட்டியுள்ள அபிஷேங் சிங்வி, ‘‘காந்தியின் தூய்மை கொள்கையை பரப்ப, சங்க் சக்திகளை பயன்படுத்தாமல், பாலிவுட் சக்திகளை பிரதமர் மோடி பயன்படுத்தியது ஆச்சர்யம். அதற்குரிய பாராட்டை கொடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார். 

Related Stories: