டெல்லி: புதிய கல்விக் கொள்கையின் கீழ் மும்மொழிக் கொள்கையை தொடர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. திருத்தம் செய்யப்பட்ட கல்வி கொள்கைக்கு வரும் வாரத்தில் மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு இறுதி செய்யப்பட்ட தேசிய கல்வி கொள்கையின் வரைவானது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மும்மொழி கொள்கைக்கு எதிராக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியதை அடுத்து, தற்போது அதிலும் மத்திய அரசானது மாற்றத்தை செய்திருக்கிறது.
அதாவது 6 முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவதாக செம்மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை பயிற்றுவிப்பதற்கான இறுதி முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது என்ற தகவல் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தினுடைய அதிகாரிகள் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒடியா உள்ளிட்ட 6 செம்மொழிகளில் ஏதேனும் ஒரு செம்மொழியை மூன்றாவது மொழியாக பயிற்றுவிப்பதற்கான முடிவினை இறுதி படுத்திருப்பதாக தகவலானது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த வாரம் புதன் கிழமை நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மும்மொழி கொள்கைக்கு இறுதி ஒப்பந்தம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பார்க்கப்படுகிறது.