மைசூரு: கர்நாடகாவில் தாக்குதல் நடத்த, பெங்களூரு, மைசூருவில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று அளி்தத பேட்டி: கர்நாடகவில் பாதுகாப்பு விவகாரத்தில் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, மாநிலத்தில் எக்காரணம் கொண்டும் அசம்பாவித சம்பவங்கள் நடக்க அரசு அனுமதிக்காது. வங்கதேசத்தை சேர்ந்த தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடலோர மாவட்டங்கள் மூலமாக கர்நாடகாவுக்குள் நுழைந்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் பெங்களூரு, மைசூரு, மற்றும் கடலோர மாவட்டங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் போலீசார் தீவிரவாதிகளை கண்டறியும் பணியில் இரவு பகல் என பாராமல் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.