புதுடெல்லி: நிலம் கையகப்படுத்தும் சட்டம் தொடர்பாக வழங்கப்பட்ட இரு தனித்தனி தீர்ப்புகளை ஆய்வு செய்ய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதன்படி நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, வினீத் சரண், எம்.ஆர்.ஷா, ரவீந்திரா பட் ஆகியோர் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது.இதில், நீதிபதி அருண் மிஸ்ரா, ஆய்வுக்கு உட்படுத்தப்படும் தீர்ப்புகளில் ஒன்றை வழங்கியவர். எனவே, அவர் 5 நீதிபதிகள் அமர்விலிருந்து விலகக் கோரி விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை விமர்சித்து சமூக ஊடகங்கள் மற்றும் சில செய்தி கட்டுரைகளும் வெளியாகின.இந்நிலையில், இந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.