தானே: ‘‘பா.ஜ.வுக்கு ஓட்டுப் போட்டால், பாகிஸ்தான் மீது குண்டு போடுவதாக அர்த்தம்’’ என தானேயில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உ.பி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா பேசினார். மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள மிரா பயந்தர் சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ சார்பில் நரேந்திர மேத்தா என்பவர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து உ.பி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டபின் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் நடைபெறவுள்ள தேர்தலை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.