அறியாதவை ஆனால் அவசியமானவை

 IBS-னா என்னன்னு தெரியணுமா?

Irritable Bowl Syndrom சுருக்கமாக IBS என்றால் பலருக்கும் புரியாது. அதாவது சாப்பிட்டவுடன் மலம் கழிக்க வேண்டும் என்று ஓர் உணர்வு வருமே அதுதான் இது என்றால் பலரும் ஆமாம்ப்பா ஆமாம் என்று சொல்வார்கள். நாம் எல்லோருமே வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த அவஸ்தைக்கு ஆளாகித் திரும்பியிருப்போம்.சரி இந்த ஐபிஎஸ் ஏன் வருகிறது?இரைப்பை, பெருங்குடல் மற்றும் சிறுகுடல்களின் சீரான இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது தடங்கல்களால் இந்தப் பிரச்னை வருகிறது. வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகள் விரைந்து செயல்படுவதால் ‘ஐபிஎஸ்-டி’ (IBS-D) எனப்படும் வயிற்றுப்போக்கும், இயல்புக்கும் குறைவான வேகத்தில் செயல்படுவதால் ‘ஐபிஎஸ்-சி’ (IBS-C) எனப்படும் மலச்சிக்கலும் வருகின்றன. செரிமானப் பாதைகளில் ஏற்படும் தொற்று, மூளைக்கும் செரிமான மண்டலத்துக்குமான தொடர்பில் குளறுபடி, மன அழுத்தம் மற்றும் மனப்பதற்றம் காரணமாகவும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.

அறிகுறிகள் : வயிற்று வலி, வயிற்று உப்புசம், உணவு உண்டவுடன் மலம் கழிக்க வேண்டும் எனும் உணர்வு, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், சிலருக்கு தொடர்ந்து சில நாட்களுக்கு மலச்சிக்கலும், பிறகு தொடர்ந்து சில நாட்களுக்கு வயிற்றுப்போக்கும் மாறி மாறி ஏற்படும். இது ஒரு தற்காலிகப் பிரச்சனைதான். ஆனால் இதுவே மாதக்கணக்கில் இருந்தால் அவசியம் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.உணவில் கவனம் : உணவில் நார்ச்சத்து அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரசாரமான மசாலாப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் ஜங்க் ஃபுட்ஸையும் தவிர்க்க வேண்டும். முழுதானியங்கள், காய்கறிகள், பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். தேநீர், காபி குடிப்பதைத் தவிர்ப்பதோ, இயன்றவரை குறைத்துக் கொள்வதோ நல்லது.

பாலில் கலப்படமா?கண்டுபிடிப்பது எப்படி?

பாலில் தண்ணீரைக் கலப்பதுதான் காலகாலமாக நடக்கும் கலப்படம். ஆனால் தற்போது பால் நிறம் வருவதற்காகவும் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அதில் யூரியா, ஸ்டார்ச்சு, மைதா மாவு, குளுக்கோஸ், பிளேட்டிங் பவுடர் உட்பட பல்வேறு பொருட்களைக் கலக்கிறார்கள். இதனால் வயிற்றின் செரிமானத்திறன் பாதிக்கப்படுகிறது. அல்சர் முதல் புற்றுநோய் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

*தண்ணீர் கலப்படம் : ஒரு வழுவழுப்பான சாய்வான ஓட்டின்(டைல்ஸ்) மீது ஒரு துளி பாலை விடும்போது பால் மெதுவாக கீழ்நோக்கி ஓடும். அப்போது பால் ஓடிய பாதையில் சுவடாக வெள்ளை நிறக் கோடு இருந்தால்அது சுத்தமான பால். சுவடுகள் ஏதும் இல்லை என்றால் பாலில் தண்ணீர் கலந்துள்ளது என்று பொருள்.

*மாவுக் கலப்படம் : சிறிதளவுப் பாலில் சில துளிகள் டின்ச்சா; அயோடின் அல்லது அயோடினைச் சேர்க்கும்போது பாலின் நிறம் நீலமாக மாறினால் அது ஸ்டார்ச் (மாவுப்பொருள்) சேர்க்கப்பட்ட கலப்படப் பாலாகும்.

*யூரியா கலப்படம் : 1) ஒரு சோதனைக் குழாயில் ஒரு தேக்கரண்டி பாலில் அரை தேக்கரண்டி சோயாபீன் தூளைச் சேர்த்து நன்கு குலுக்கி 5 நிமிடங்கள் கழித்து அதில் சிவப்பு லிட்மஸ் தாளை அரை நிமிடம் வைக்க வேண்டும். அப்போது லிட்மஸ் தாள் நீலநிறத்துக்கு மாறினால் அந்தப் பால் யூரியா சேர்க்கப்பட்ட கலப்படப்பாலாகும் (SNF - மதிப்பை அதிகரிக்கச் செய்ய பாலில் யூரியா கலப்படம் செய்யப்படுகிறது) 2) ஒரு சோதனைக் குழாயில் 5 மிலி பாலில் 5 மிலி Paradimethyl amino benzaldehyde (16 percent)-ஐச் சேர்க்கும்போது மஞ்சள் நிறம் தோன்றினால் அந்தப் பால் யூரியா சேர்க்கப்பட்ட கலப்படப்பாலாகும்.

ஃப்ரூட்டேரியன் டயட்டுன்னா என்னன்னு தெரியுமா?

வெறும் பழங்களை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்வதுதான் ஃப்ரூட்டேரியன் டயட். ஆறு மாதங்களுக்கு இதை எடுத்துக்கொண்டால் உடலில் உள்ள நச்சுக்கள் யாவும் நீங்கும் என்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வகை பழத்தை உண்டபின் 45 - 90 நிமிடங்களுக்கு வேறு வகை பழங்களைச் சாப்பிடக் கூடாது. பசி அடங்கவில்லை என்றால் பசி தீரும் வரை அதே வகை பழத்தைச் சாப்பிடுவது நல்லது. தொடர்ந்து ஒரேவகையான பழத்தைச் சாப்பிடும்போது சாப்பிடுவதற்கான ஆர்வம் குறையும் என்பதால் பசி தானாகவே மட்டுப்படும். பழங்கள்தான் பிரதான உணவு என்பதால் இந்த டயட்டில் தண்ணீர் அதிகமாகப் பருக வேண்டிய தேவை இருக்காது. ஆனால், பழங்களுடன் காய்கறிகள் அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது தண்ணீர் போதுமான அளவு பருக வேண்டியது அவசியம்.

*காலை 6:00 - 9:00 : காலை எழுந்தவுடன் மூன்று முதல் ஐந்து எலுமிச்சைகள் சேர்த்த ஜூஸ். தர்பூசணி பழம் மற்றும் ஜூஸ் வயிறு நிரம்பும் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் நட்ஸ்கள், விதைகள் எடுத்துக்கொள்வதால் உடலுக்குத் தேவையான கொழுப்பு கிடைக்கும்.

*மிட் மார்னிங் 9:00 - 12:00 : வயிறு நிரம்பும் அளவு ஆப்பிள், அன்னாசி, அத்தி, திராட்சை, பிளம்ஸ், கிவி, வெள்ளரிக்காய் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*மதியம் 12:00-3:00: ஆரஞ்சு, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, ஆப்ரிகாட், பப்பாளி ஆகியவை வயிறு நிரம்பும் அளவு எடுத்துக்கொண்டு, நட்ஸ்கள், விதைகள், எண்ணெய் பழங்கள் எடுத்துக்கொண்டால் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்து கிடைக்கும்.

*பின் மதியம் 3:00-6:00 : மாம்பழம், செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு பிளம்ஸ், மாதுளம் பழம், தர்பூசணி, வாழைப்பழம்.

*மாலை 6:00-9:00 : திராட்சை, பிளாக் பெர்ரி, ராஸ்பெர்ரி.

*இரவு 9:00-12:00 : மாம்பழம், செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ், தர்பூசணி, மாதுளம் பழம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் வாழைப்பழம், உலர் பழங்கள் சாப்பிடுவதால், நார்ச்சத்து கிடைக்கும். செரிமானம் எளிதாகும்.

Related Stories: