வழிப்பறி, செல்போன் பறித்த 4 சிறுவர்கள் பிடிபட்டனர்

சென்னை: கொடுங்கையூர் அமுதா நகரை சேர்ந்த முத்துவேல் என்பவரை கத்தி முனையில் மிரட்டி, 3 ஆயிரத்தை பறித்து சென்ற அதே பகுதியை சேர்ந்த ஹாஸ்டல் சரவணன் (19), டேனியில் (22), ஸ்ரீதர் (21), மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* அயனாவரம் பெரியார் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (32), கடந்த 1ம் தேதி இரவு வில்லிவாக்கம் பகுதியில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட அம்பத்தூர் அன்னை சத்யா நகர் எரிக்கரை தெருவை சேர்ந்த ரகுவரன் (21) மற்றும் இவரது கூட்டாளியான 17 வயதுக்கு உட்பட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

* மாதவரம் சாஸ்திரி நகரை சேர்ந்த லோகேஸ்வரி (36) என்பவரிடம் செயின் பறிக்க முயன்ற கொசப்பூரை சேர்த்த தேவராஜ் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* சென்னை எம்ஜிஆர் நகர் சூளைபள்ளம் பாரதியார் 1வது தெருவில், வாடகைக்கு வீடு பார்ப்பது போல் நடித்து, அதே பகுதியை சேர்ந்த  மரியே குழந்தை தெரசா (48) என்பவரிடம் நூதன முறையில் செல்போனை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

* புது பெருங்களத்தூர், தாய் மூகாம்பிகை நகர், சித்ரா அவென்யூ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி, கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்த கூடுவாஞ்சேரியை சேர்ந்த அப்பு (எ) முத்துக்குமார் (25), தினேஷ் (எ) அப்பளம் தினேஷ் (24), கோகுலகிருஷ்ணன் (24), சிட்லபாக்கம், டி.என்.எச்.பி காலனியை சேர்ந்த ஜீவா (40) என்ற பெண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

6 பேருக்கு குண்டாஸ்

சென்னையில் வீடு புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த காரைக்கால் மேலவாஞ்சிலூர் தாலுகா விசாலாட்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த முகமது யாசின் அராபத் (எ) யாசின் (24), அம்பத்தூர் கள்ளிக்குப்பம் மதனகுப்பம் சாலையை சேர்ந்த அங்குராஜ் (38), கொளத்தூர் ஜி.கே.எம். காலனியை சேர்ந்த மாணிக்கராஜ் (எ) ராஜ் (33), பொழிச்சலூர் ராமு தெருவை சேர்ந்த ஹரிகரன் (எ) ஹரி (29), கொலை வழக்கில் தொடர்புடைய சோழவரம் பொருமாள் கோயில் தெருவை சேர்ந்த சந்துரு (எ) சந்திரகுமார் (34), கொலை மற்றும் கஞ்சா வழக்கில் தொடர்புடைய புளியந்தோப்பு நரசிம்மன் நகரை சேர்ந்த அஞ்சலை (48) ஆகிய 6 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories: