10 கொலை உட்பட 50 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ‘பாம்’ சரவணன் கோர்ட்டில் சரண்

பெரம்பூர்: திருவள்ளுர் மாவட்டம், திருப்பாச்சூரை சேர்ந்த பிரபல ரவுடி ‘பாம்’ சரவணன் (40). இவர் மீது, சென்னை கே.கே. நகரை சேர்ந்த கதிரவன் கொலை உள்ளிட்ட 10 கொலை வழக்குகள், வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகள், பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. போலீசாரால் தேடப்பட்ட இவர்  நேற்று மதியம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் விரைவு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

* கொளத்தூர் செந்தில் நகர் 7வது குறுக்கு தெருவை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் சிவன் (57) என்பவரின் வீட்டு பூட்டை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 6 சவரன் நகை, 50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

* திருச்சியை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் ரவி (37), அரசு வேலைக்கான நேர்காணலுக்காக பேருந்து மூலம் நேற்று காலை கோயம்பேடு வந்தார். அப்போது, அவரது லேப்டாப் மற்றும் சான்றிதழ்கள் வைத்திருந்த பை திருடு போனது தெரிந்தது.

* கோயம்பேடு பஸ் நிலையத்தின் 1வது நடைமேடை அருகே 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். போலீசார், சடலத்தை கைப்பற்றி, இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.

* பீர்க்கன்காரணை ஏரிக்கரை தெருவை சேர்ந்த பிரதீப் (14), காது கேளாத மாற்றுத் திறனாளி. 9ம் வகுப்பு படித்து வந்த இச்சிறுவன், நேற்று பீர்க்கன்காரணை ஏரிக்கரை பஸ் நிறுத்தம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மின்சார ரயில் மோதி இறந்தார்.

* அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பாரதிதாசன் தெருவை சேர்ந்த வாசுதேவன் என்பவரின் வீட்டு பூட்டை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் 6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

* திருவொற்றியூர் வஉசி நகரில் குட்கா பதுக்கி விற்ற அதே பகுதியை சேர்ந்த ஞானராஜ் (40), ராயபுரத்தை சேர்ந்த குமரேசன் (50) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 300 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

* பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த லட்சுமி (48), நேற்று காலை  ராஜீவ்காந்தி சாலையை கடந்தபோது பைக் மோதி இறந்தார்.

Related Stories: