புதுடெல்லி: காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து புதிய வழக்குகள் தொடர உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகார சட்டப்பிரிவு 370ஐ ரத்து ெசய்து மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அதிரடி உத்தரவிட்டது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், காஷ்மீர் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர், ‘370வது சட்டப்பிரிவு ரத்து தொடர்பாக 10க்கும் மேற்பட்ட வேறுபட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால் இதற்கு பதில் தர 4 வாரம் அவகாசம் வேண்டும்,’ என கேட்டனர்.