மீனம்பாக்கம்: துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 17 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் லேப்டாப்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர். துபாயில் இருந்து இலங்கை வழியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த ஷாகுல் அமீது (45) என்பவர் துபாய்க்கு சுற்றுலா பயணிகள் விசாவில் சென்றுவிட்டு சென்னை திரும்பினார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரை தடுத்து நிறுத்தினர். விசாரணையில், ஷாகுல் அமீது முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார். அவரது உடமைகளை சோதனையிட்டபோது, உபயோகப்படுத்திய 10 லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தன. அதன் மதிப்பு 1 லட்சம். சிகரெட், லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.