புதிய தலைமுறை ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி ரக கார், முதல்முறையாக புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாடலாக வெளியிடப்பட்டு இருக்கிறது. வரும் டிசம்பரில் அமெரிக்காவில் விற்பனைக்கு வர இருக்கும் இப்புதிய மாடல், அடுத்து இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. இதில், முக்கிய மாற்றமாக, புதிய கிரில் அமைப்பு, பம்பர் அமைப்பு இடம்பெற்றுள்ளது. கிரில் அமைப்பில் பெரிய குரோம் சட்டமும், அதற்கு கீழாக கருப்பு வண்ண சட்டமும் இடம்பெற்றுள்ளது. இந்த காரில் புதிய பம்பர் அமைப்பு, எல்இடி பனி விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஏர்டேம் பகுதி குரோம் பீடிங்குடன் அழகாக காட்சி தருகிறது. பக்கவாட்டிலும், பின்புறத்திலும் பெரிய மாற்றங்கள் இல்லை. புதிய 19 அங்குல அலாய் வீல் இடம்பெற்றுள்ளது. பின்புறத்தில் புதிய வடிவிலான ஸ்கிட் பிளேட்டுகள் உள்ளன. இன்டீரியரிலும் எந்த மாற்றங்களும் இல்லை. இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே செயலிகளை சப்போர்ட் செய்யும். அத்துடன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது. டியூவல் ஸோன் ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம் மற்றும் ஓட்டுனருக்கு காரின் இயக்கம் குறித்த தகவல்களை பெறுவதற்கான தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன.