பிரியங்காவை பார்த்து பாஜ தலைவர்கள் பீதி: உபி காங். தலைவர் பெருமிதம்

லக்னோ: ‘‘பிரியங்கா காந்தியை பார்த்து பாஜ தலைவர்கள் பயப்படுகிறார்கள்’’ என உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ்பாபர் கூறியுள்ளார். இது குறித்து நேற்று அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அடித்தட்டு மக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்துகிறார். அவர் கட்சி நிர்வாகிகள், தலைவர்களை பார்ப்பதில்லை. இது நல்ல அறிகுறி. பாஜ தலைவர்கள் யாருக்காவது பயப்படுகிறார்கள் என்றால் அது பிரியங்கா காந்தியை பார்த்துதான். அவர் எழுப்பும் பிரச்னைக்கு, பாஜ தலைவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. பிரியங்கா தெரிவிக்கும் கருத்துக்கள் டிவிட்டருடன் முடிந்து போகும் என அவர்கள் கருதினர். ஆனால், அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் மக்கள் மனதுடன் ஒத்துபோகிறது. அதை பா.ஜ.வால் உணர முடியவில்லை. அதிகாரத்தில் இருப்பதால் பாஜ.வினர் கண்களை மூடிக்கொண்டு இருக்கின்றனர்.

உ.பி.யில் பிரியங்கா முழுப் பொறுப்பு எடுத்துக் கொண்டுள்ளதால், எல்லோரும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். உ.பி ஹமிர்பூர் இடைத்தேர்தலில், பாஜ.வை எதிர்த்து போரிடும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். மற்றவர்கள் பயப்படுகின்றனர். முழு தீவிரத்துடன் காங்கிரஸ் போராடி வருகிறது. இது நல்ல அறிகுறி. மத்திய, மாநில அரசுகள் பரப்பும் பொய்கள், மோசமான சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களால் நிலவும் பாதுகாப்பற்ற தன்மை ஆகியவை குறித்து இந்த தேர்தல் பிரசாரத்தில் நாங்கள் பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: