உத்தரபிரதேசத்தில் பேருந்து ஓட்டுநர் தலைக்கவசம் அணியாததால் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம்

நொய்டா: உத்தரபிரதேசத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் தலைக்கவசம் அணியாததற்காக, பேருந்தின் உரிமையாளருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சுமார்  50 பேருந்துகளை வைத்து தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நிரங்கர் சிங் என்பவர் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான பேருந்தின் ஓட்டுநர் தலைக்கவசம் அணியாமல் பேருந்தை இயக்கியதாக கூறி, நிரங்கர் சிங்குக்கு 500 ரூபாய்  அபராதம் விதித்து ஆன்லைன் மூலம் ரசீது அனுப்பப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11-ம் தேதியிடப்பட்ட ஆன்லைன் ரசீதை, தனது ஊழியர் மூலம் நிரங்கர் சிங் உறுதி செய்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தேவை ஏற்பட்டால் தனக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை எதிர்த்து நீதிமன்றத்தில்  முறையிடப்போவதாக தெரிவித்துள்ளார்.மேலும் போக்குவரத்துத் துறையின் அவல நிலையை இந்த ரசீது காட்டுவதாகவும், நாள்தோறும் விதிக்கப்படும் நூற்றுக்கணக்கான அபராதங்களின் நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்கியிருப்பதாகவும்  நிரங்கர் சிங் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த ரசீது போக்குவரத்து துறையால் வழங்கப்பட்டிருப்பதாகவும், போக்குவரத்து காவலர்களால் வழங்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: