மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் தொகுதி உடன்பாடு பாஜ-162, சிவசேனா-126 : நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா 126 தொகுதிகளிலும், பாஜ 162 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் ்அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் ராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதில், பாஜ.வும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்த போதிலும், தொகுதி பங்கீடு தொடர்பாக உடன்பாடு எட்டப்படுவதில் இழுபறி நீடித்து வந்தது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் சரிபாதி இடங்களை அதாவது, 144 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று சிவசேனா பிடிவாதமாக கூறி வந்தது. ஆனால், 114 இடங்கள் தருவதாக பாஜ கூறியது. இதனை சிவசேனா ஏற்க மறுத்தது. இதனால், கூட்டணி முறியக்கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும் உத்தவ் தாக்கரேக்கு நெருக்கமானவருமான அமைச்சர் சுபாஷ் தேசாயுடன், முதல்வர் தேவேந்திர பட்நவிஸ்  நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை பலமுறை தொகுதி பங்கீடு குறித்து பேசினார்.

இதில், தற்போது சுமூக உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், சிவசேனா 126 தொகுதிகளிலும், பாஜ 162 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், ‘‘பாஜ.வுடன் கூட்டணி சேர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது என சிவசேனா முடிவு செய்துள்ளது. தொகுதி பங்கீடு குறித்து அடுத்த இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போதே சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பார்முலாவும் வகுக்கப்பட்டு விட்டது. அதன்படியே இரு கட்சிகளும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும்’’ என்றார். மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ தேசியத் தலைவருமான அமித் ஷா நாளை மும்பை வருகிறார். அப்போது, உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசுகிறார். அதன் பிறகு இருவரும் கூட்டாக, தொகுதி பங்கீடு அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா, அரியானாவுக்கு தீபாவளிக்கு முன்பாக தேர்தல்?

மகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவை தேர்தலை,  அக்டோபர் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளிக்கு முன்பே நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஜார்கண்ட் சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜனவரி முதல் வாரத்தில்தான் முடிகிறது. இதனால், இங்கு டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ கட்சியும், அதன் கூட்டணியில் உள்ள சிவசேனாவும் ஏற்கனவே தேர்தல் பிரசார களத்தில் குதித்துள்ளன. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கடந்த மாதம் மகாஜன் ஆதேஷ் யாத்திரையை தொடங்கினார்.

பீகாரில் மீண்டும் தேஜ ஆட்சி

பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடந்த ஐக்கிய ஜனதா தள மாநில கவுன்சில் கூட்டத்தில் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், ‘‘பீகாரில் தேஜ கூட்டணியில் எந்த பிளவும் இல்ைல. ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ கூட்டணிக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்த முயல்பவர்களுக்குதான் சிக்கல் ஏற்படும். பீகாரில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் வென்று தேஜ கூட்டணி ஆட்சியை பிடிக்கும்,’’ என்றார்.

Related Stories: