பெங்களூரு: பெங்களூருவில் இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கண்காட்சி நேற்று நடந்தது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்துஸ்தான் ஏரோனாடிகல் நிறுவன விமான நிலையத்தில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார். அவருடன் விமானப்படை தளபதி என். திவாரியும் சென்றார். இந்த விமானத்தில் பயணித்த முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கண்காட்சியை பார்வையிட்ட பிறகு ராஜ்நாத் சிங் அளித்த பேட்டி:உள்நாட்டு தொழில்நுட்பத்தை நாம் இந்தளவுக்கு பயன்படுத்துவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. வரும் 2029-30 ஆண்டில் ராணுவத்தில் 75 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருக்கும். நூறு சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. இங்கு நான் இன்று பார்த்தவை, கேட்டவை ஆகியவற்றின் அடிப்படையில் சொல்கிறேன், உங்களை நினைத்து நாடு பெருமை கொள்கிறது.