கோவை: தமிழகத்தை ஒட்டிய அண்டை மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட 15 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலங்கானா ஆகியவற்றில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஏராளமான குழந்தைகள், பெரியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6 பேர் வரை உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், கோவை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய 15 மாவட்டங்கள் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பொதுசுகாதாரத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறப்பு குழு அமைத்து டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.