தாழையூத்து: மானூர் ஊராட்சி குப்பணாபுரம் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மானூர் ஊராட்சி ஒன்றியம், குப்பணாபுரம் கிராமத்தில் இந்திராநகர் குடியிருப்பு உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இந்த கிராமத்திலிருந்து 500மீ தொலைவில் சாலை உள்ளது. தெருக்களில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பேருந்திலிருந்து இறங்கி வரும் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். இப்பகுதியினர் அனைவரும் கூலி தொழிலாளிகள். அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் இப்பகுதியை மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் தொடர்ந்து புறக்கணிப்பதாகவும், பல பணிகளை செய்யாமலே பணிகள் முடிந்ததாக கணக்கு காண்பிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.