ஆவடி: ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், செந்தில் நகர், ராஜாஜி சாலையில் ‘ஆந்திரா வங்கி’’ கிளை உள்ளது. கடந்த 27ம் தேதி மாலை வேலை முடிந்து ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டு சென்றனர். பின்னர், மறுநாள் காலை ஊழியர்கள் வங்கியை திறக்க வந்தனர். அப்போது வங்கியின் இரும்பு ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும், வங்கியின் முன் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதோடு மட்டுமல்லாமல், வங்கியின் லாக்கர் உடைக்க முயற்சி நடந்ததும் தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் ஜான்சுந்தர், ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.திருமுல்லைவாயல் பகுதிகளில் உள்ள 32 கண்காணிப்பு கேமராக்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது அந்த கேமராவில் வங்கியில் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரின் உருவம் பதிந்து இருந்தது தெரியவந்தது. இந்த கேமராவில் பதிவான உருவத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.