கோவை: பசுவின் கோமியம் விரைவில் மருந்துப்பொருளாக அறிவிக்கப்படும் எனவும், தற்போது அதற்கான ஆராய்ச்சி நடந்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார்.கோவையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சர்வதேச அளவிலான சிகிச்சை இந்தியாவில் கிடைக்கிறது. நோயாளிகளின் வீடுகளுக்கு மருத்துவர்களே சென்று சிகிச்சை அளிக்கும் முறை வரவேண்டும் என எதிர்பார்க்கிறேன். மருத்துவ சேவையில் இந்தியா சிறப்பாக திகழ வேண்டும் என்ற பிரதமர் மோடியின் விருப்பத்தை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் 2025க்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் திட்டத்தின்கீழ் புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.