திருமலை: ஆந்திராவில் கோயில் முன் 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்தவர் திடீரென உயிரிழந்தார். அவர் வைத்திருந்த பையில் ரூ.1.83 லட்சம் இருந்ததை போலீசார் கைப்பற்றினர். ஆந்திராவின் ராஜமகேந்திரவரத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் மார்க்கண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வெளியே காஞ்சி நாகேஸ்வரராவ் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்தார். கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு, அங்கேயே வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மாதந்தோறும் காக்கிநாடா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் காஞ்சி நாகேஸ்வரராவின் உடல்நிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகவும் மோசமானது. நேற்று முன்தினம் கோயில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது அவர் திடீரென இறந்தார்.