லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தொடக்கப் பள்ளி ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டாக மாணவர்களுக்கு மதிய உணவாக சப்பாத்தியும் உப்பும் வழங்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூர் அருகேயுள்ள ஹினோதா கிராமத்தில் சியூர் தொடக்க பள்ளி உள்ளது. இங்கு மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவாக சப்பாத்தியும் தொட்டுக்கொள்ள உப்பும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ கடந்த 22ம் தேதி சமூக வலைதளங்களிலும், மறுநாள் உள்ளூர் ெதாலைக்காட்சியிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2 ஆண்டாக இந்த பள்ளியில் சப்பாத்தியும் உப்புமே மதிய உணவாக வழங்கப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கண்டுக்கொள்ளவில்லை. இந்த நிலை மாறாது என பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில்தான் வீடியோ வெளியாகி உண்மையை அறிய செய்துவிட்டது.