புதுடெல்லி: ‘ராமர், ராமாயணம் தொடர்பான தலங்களுக்கு அழைத்து செல்லும் ராமாயண சுற்றுலாப் பயணம் வரும் நவம்பரில் தொடங்கும்,’ என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வேயின் உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி நேற்று வெளியிட்ட அறிக்கை:
வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி வழியாகவும், 18ம் தேதி இந்தூரில் இருந்து வாரணாசி, வழியாகவும் இரண்டு ராமாயண எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதில் அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி, அனுமன் கார்கி, பீகாரில் உள்ள சீதை கோயில், ராமேஸ்வரத்தில் உள்ள ஆஞ்சநேயர் பாதம், ஜோதிர்லிங்க சிவன் கோயில் உள்பட ராமர், ராமாயணம் தொடர்பான தலங்களுக்கு 16 நாட்கள் சுற்றுலா அழைத்து செல்ல தனிநபருக்கு 16,065 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இது தவிர, இலங்கையில் உள்ள சீதை வனம், விபீஷணர் கோயில், முனீஸ்வரம் சிவன் கோயில் ஆகிய தலங்களுக்கு விமானம் மூலம் சென்று வர தனிநபருக்கு 36,950 கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதேபோன்று ராமாயணா எக்ஸ்பிரஸ் ரயில் ஓரிரு மாதங்களில் மதுரையில் இருந்து இயக்கப்படும்’’ என்று ரயில்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.