டெல்லியில் அமித்ஷாவை சந்திக்கும் விவகாரத்தில் தகுதி நீக்க எம்எல்ஏ.க்கள் எடியூரப்பாவுடன் மோதல்

பெங்களூரு : டெல்லியில் முகாமிட்டுள்ள கர்நாடக தகுதி நீக்க எம்எல்ஏக்கள் 17 பேரை  சமாதானப்படுத்தி பெங்களூருவுக்கு அனுப்பி வைக்க முதல்வர் எடியூரப்பா  மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. பாஜ தலைவர் அமித்ஷாவுடன் தான்  பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அவர்கள் பிடிவாதமாக கூறி விட்டதால்,  எடியூரப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மஜத-காங்கிரஸ் கட்சிகளை  சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்ததாக கூறி  தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக  கூறி சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் 17 எம்.எல்.ஏ.க்களின் பதவியை தகுதி  நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால், கூட்டணி அரசு கவிழ்ந்தது.  இதன் பின்னர் எடியூரப்பா முதல்வரானார். இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்  பாஜவை சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். பாஜ  ஆட்சி அமைய காரணமான 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களின் எதிர்காலம்  கேள்விக்குறியாகுமோ என்ற பீதியில் கடந்த 3 நாட்களுக்கு முன் டெல்லிக்கு  புறப்பட்டு சென்றனர்.

முதல் 2 நாட்கள் சபாநாயகரின் தீர்ப்பை  எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரிப்பதற்கான புதிய மனு 17 தகுதி  நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல்வர் எடியூரப்பா  டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் எடியூரப்பாவின் மகன்  விஜயேந்திரா, அமைச்சர் அஸ்வத்நாராயணா ஆகியோரும் சென்றனர். பாஜ தேசிய தலைவர்  அமித்ஷாவை சந்தித்தே தீரவேண்டும் என்ற நோக்கத்துடன் தகுதி நீக்கம்  செய்துள்ள 17 எம்.எல்.ஏ.க்களும் டெல்லியில் உள்ள தனியார் ஓட்டலில்  தங்கியுள்ளனர். இவர்களை சந்தித்து சமாதானம் செய்ய விஜயேந்திராவும்,  அமைச்சர் அஸ்வத்நாராயணாவும் தனியார் ஓட்டலுக்கு சென்றனர்.  ஆனால்,  இவர்களை 17 பேரும் சந்திக்க மறுத்துவிட்டனர். மேலும், நாங்கள் முதல்வர்  எடியூரப்பா மற்றும் அமித்ஷா ஆகியோரை மட்டுமே சந்தித்து பேசுவோம் என  கண்டிப்புடன் கூறிவிட்டனர். இதை தொடர்ந்து கர்நாடக பவனில் தங்கியிருந்த  முதல்வர் எடியூரப்பா ஓட்டலுக்கு சென்று 17 பேரையும் சமாதானம் செய்யும்  முயற்சியில் ஈடுபட்டார்.

இதை தொடர்ந்து அமித்ஷாவை சந்திக்கும்  விவகாரம் தொடர்பாக 17 பேர்களிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் எடியூரப்பா  பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ய முயன்றார். அப்போது, ‘‘நீங்கள்  எதற்கும் ஆதங்கம் கொள்ள வேண்டாம். உங்களுக்–்கு ஆதரவாக நாங்கள்  இருக்கிறோம்.

நீதிமன்ற தீர்ப்பு வெளியான உடன், உங்களுக்கு சாதகமான  முடிவை பாஜ மேற்கொள்ளும்’’ என எடியூரப்பா கூறினார். ஆனால், எடியூரப்பாவின்  உறுதி மொழியை ஏற்க மறுத்து 17 பேரும், அமித்ஷாவை சந்திப்பதற்காகவே நாங்கள்  டெல்லிக்கு வந்துள்ளோம். ஒரு வாரம் ஆனாலும், இங்கேயே தங்கியிருந்து  அமித்ஷாவை சந்தித்த பின்னர் தான் பெங்களூருவுக்கு திரும்புவோம் என  திட்டவட்டமாக கூறினர். அதற்கு எடியூரப்பா, ‘‘உங்கள் வழக்கு தற்போது  நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அமித்ஷாவை சந்தித்து  பேசுவது  உகந்ததல்ல. எனவே, பெங்களூருவுக்கு திரும்புங்கள்’’ என ஆலோசனை  கூறினார். எடியூரப்பா எவ்வளவோ முயன்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட  எம்.எல்ஏ.க்கள், தங்கள் நிலையில் இருந்து கீழே இறங்கவே இல்லை. இதனால்  முதல்வர் எடியூரப்பா, ஓட்டலில் இருந்து கர்நாடகா பவனுக்கு திரும்பிச் செல்ல  வேண்டிய நிலை ஏற்பட்டது.

தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களின் விவகாரத்தில் எடியூரப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: