6.3 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் பிஎப் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்

புதுடெல்லி: பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6.3 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். பணியாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் முக்கிய முடிவு எடுக்கும் மத்திய அறங்காவலர்கள் கூட்டம் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில்  பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டம் 1995ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி ஓய்வூதிய திட்டத்தில் இடம் பெற்றுள்ளவர்கள் பகுதியளவு தொகையை முன்பணமாக எடுக்க முடியும். இந்த திட்டம் 2009ம் ஆண்டு திரும்ப பெறப்பட்டது.

இந்த நிலையில் 2009க்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்கள் முன்பணம் எடுக்கும் வசதிக்கு ஈபிஎப்ஓவின் மத்திய அறங்காவலர் குழு இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின்படி ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதிய தொகை  அடுத்த 15 ஆண்டுகளுக்கு மூன்றில் ஒரு பகுதி குறைக்கப்படும். 15 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் அவர்கள் முழு ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் 6.3 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். இது தவிர நிதி ஒதுக்கீட்டை, நிப்டி மற்றும் சென்செக்ஸ்க்கு தலா 50 சதவீதமாக ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ரூ.2300 கோடியை குஜராத் மாநில பெட்ரோலிய கழகக் கடன் பத்திரத்தில் முதலீடு செய்து வருகிறது. இந்த பணத்தை இனி குஜராத் மாநில நிதியகத்திற்கு மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories: